Idumban. Asuran. Hidimba Devi Temple. Kullu. Manali. Idumban Kovil. Palani. All Scheduled Tribes. Aadhi Dravidars of India. Sri Lanka. Ravanan + Idumban same blood.

திருஞானசம்பந்தர் அருளிய
முதலாம் திருமுறை பாடல்கள் 1469
*********************************************
136 பதிகங்கள் ; பதிகம் எண் 17
88 கோவில் : திருஇடும்பாவனம்

பாடல் எண் 177 பண் : நட்டபாடை
-----------------------------------------------------------------------
மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்
தனமார்தரு சங்கக்கடல் வங்கத்திர ளுந்திச்
சினமார்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில்
இனமாதவ ரிறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.

பொழிப்புரை :
---------------------------------------
மனத்தால் விரும்பப் பெற்ற மனைவியரோடு மகிழ்ச்சிமிக்க இளைஞர்களால் மலர்தூவி வழிபட்டுச் செல்வம் பெறுதற்குரியதாய் விளங்குவதும், சங்குகளை உடைய கடலில் உள்ள கப்பல்களை அலைகள் உந்தி வந்து சேர்ப்பிப்பதும் ஆகிய இடும்பாவனம், சினம் மிக்க வலிய ஒளிபொருந்திய பற்களை உடைய இடும்பன் என்னும் அரக்கனுக்குரிய வளம்மிக்க குன்றளூர் என்னும் ஊரில் முனிவர் குழாங்களால் வணங்கப்பெறும் சிவபிரானுக்குரிய இடம் ஆகும்.

பாடல் எண் : 178
-------------------------------------------------------------------
மலையார்தரு மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி
நிலையார்தரு நிமலன்வலி நிலவும்புக ழொளிசேர்
கலையார்தரு புலவோரவர் காவன்மிகு குன்றில்
இலையார்தரு பொழில்சூழ்தரு மிடும்பாவன மிதுவே.

பொழிப்புரை :
---------------------------------------
இமவான் மகளாய் மலையிடைத் தோன்றி வளர்ந்த பார்வதி தேவியை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்து நிலையாக வீற்றிருந்தருளும் குற்றமற்ற சிவபிரானது வென்றி விளங்குவதும், புகழாகிய ஒளி மிக்க கலை வல்ல புலவர்கள் இடைவிடாது பயில்வதால் காவல்மிக்கு விளங்குவதுமான குன்றளூரை அடுத்துள்ள இலைகள் அடர்ந்த பொழில் சூழ்ந்த இடும்பாவனம் இதுவேயாகும்.

பாடல் எண் : 179
-------------------------------------------------------------------
சீலம்மிகு சித்தத்தவர் சிந்தித்தெழு மெந்தை
ஞாலம்மிகு கடல்சூழ்தரு முலகத்தவர் நலமார்
கோலம்மிகு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
ஏலங்கமழ் பொழில்சூழ்தரும் இடும்பாவன மிதுவே.

பொழிப்புரை :
---------------------------------------
தவ ஒழுக்கத்தால் மேம்பட்ட முனிவர்களால் சிந்தித்து வணங்கப்பெறும் எம் தந்தையாகிய சிவபிரான் எழுந்தருளிய தலம், நிலப்பரப்பினும் மிக்க பரப்புடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகச் சான்றோர்களும், நற்குணங்களும் அழகும் மலர்போலும் மென்மையான தனங்களும் உடைய பெண்களும் மிக்குள்ள குன்றளூரைச் சார்ந்த ஏல மணங்கமழும் பொழில் சூழ்ந்த இடும்பாவனம் எனப்படும் தலம் இதுவேயாகும்.

பாடல் எண் : 180
-------------------------------------------------------------------
பொழிலார்தரு குலைவாழைக ளெழிலார்திகழ் போழ்தில்
தொழிலான்மிகு தொண்டரவர் தொழுதாடிய முன்றில்
குழலார்தரு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
எழிலார்தரு மிறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.

பொழிப்புரை :
---------------------------------------
குலைகள் தள்ளிய வாழைகள் செழித்துள்ள பொழில்கள் சூழப்பெற்றதும், அழகு திகழும் காலை மாலைப் பொழுதுகளில் பணி செய்வதால் சிறப்பு மிகுந்து விளங்கும் தொண்டர்கள் தொழுது ஆடி மகிழும் முன்றிலை உடையதும் மலர் சூடிய கூந்தலை உடைய மென்முலை மடவார் சூழ்ந்துள்ளதுமான குன்றளூரை அடுத்துள்ள இடும்பாவனம் அழகுக்கு அழகு செய்யும் இறைவர்க்குரிய இடமாகும்.

பாடல் எண் : 181
-------------------------------------------------------------------
பந்தார்விர லுமையாளொரு பங்காகங்கை முடிமேல்
செந்தாமரை மலர்மல்கிய செழுநீர்வயற் கரைமேல்
கொந்தார்மலர் புன்னைமகிழ் குரவங்கமழ் குன்றில்
எந்தாயென விருந்தானிடம் இடும்பாவன மிதுவே.

பொழிப்புரை :
---------------------------------------
பந்தாடும் கை விரல்களை உடைய உமையவள்பங்கனே எனவும், கங்கை அணிந்த சடைமுடியோடு செந்தாமரை மலர்கள் நிறைந்த நீர் நிரம்பிய வளமான வயல்களின் கரைமேல் கொத்துக்களாக மலர்ந்த புன்னை, மகிழ், குரா ஆகியவற்றின் மணம் கமழ்கின்ற குன்றளூரில் எழுந்தருளிய எந்தாய் எனவும், போற்ற இருந்த இறைவனது இடம், இடும்பாவனம்.

பாடல் எண் : 182
-------------------------------------------------------------------
நெறிநீர்மையர் நீள்வானவர் நினையுந்நினை வாகி
அறிநீர்மையி லெய்தும்மவர்க் கறியும்மறி வருளிக்
குறிநீர்மையர் குணமார்தரு மணமார்தரு குன்றில்
எறிநீர்வயல் புடைசூழ்தரு மிடும்பாவன மிதுவே.

பொழிப்புரை :
---------------------------------------
தவ ஒழுக்கத்தால் சிறந்த முனிவர்கள், உயர்ந்த தேவர்கள் ஆகியோர் நினையும் நினைவுப் பொருளாகி, ஞானத்தால் தொழும் மேலான ஞானியர்கட்குத் தன்னை அறியும் அறிவை நல்கிச் சிவலிங்கம் முதலான குறிகளில் இருந்து அருள் புரிபவனாகிய சிவபெருமான் இடம், தூய சிந்தனையைத் தரும் மணம் கமழ்கின்ற குன்றளூரில் வரப்பை மோதும் நீர் நிரம்பிய வயல்கள் புடைசூழ்ந்து விளங்கும் இடும்பாவனமாகிய இத்தலமேயாகும்.

பாடல் எண் : 183
-------------------------------------------------------------------
நீறேறிய திருமேனியர் நிலவும்முல கெல்லாம்
பாறேறிய படுவெண்டலை கையிற்பலி வாங்காக்
கூறேறிய மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி
ஏறேறிய விறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.

பொழிப்புரை :
---------------------------------------
நீறணிந்த திருமேனியராய், விளங்கும் உலகெங்கணும் சென்று, பருந்து உண்ணவரும் தசையோடு கூடிய காய்ந்த பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி அன்பர்கள் இடும் உணவைப்பெற்று உமையம்மையைத் தன் மேனியின் ஒரு கூறாகிய இடப்பாகமாக ஏற்று மகிழ்ந்து விடைமீது வரும் சிவபெருமானுக்குரிய இடமாகிய இடும்பாவனம் இதுவேயாகும்.

பாடல் எண் : 184
-------------------------------------------------------------------
தேரார்தரு திகழ்வாளெயிற் றரக்கன்சிவன் மலையை
ஓராதெடுத் தார்த்தான்முடி யொருபஃதவை நெரித்துக்
கூரார்தரு கொலைவாளொடு குணநாமமுங் கொடுத்த
ஏரார்தரு மிறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.

பொழிப்புரை :
---------------------------------------
வானவெளியில் தேர்மிசை ஏறிவந்த ஒளி பொருந்திய வாளையும் பற்களையும் உடைய அரக்கனாகிய இராவணன், சிவபிரான் எழுந்தருளிய கயிலை மலையின் சிறப்பை ஓராது, தன்தேர் தடைப்படுகிறது என்ற காரணத்திற்காக மலையைப் பெயர்த்துச் செருக்கால் ஆரவாரம் செய்ய, அவன் பத்துத் தலைமுடிகளையும் நெரித்தபின் அவன் வருந்திவேண்ட, கருணையோடு கூரிய கொலைவாள், பிற நன்மைகள், இராவணன் என்ற பெயர் ஆகியவற்றைக் கொடுத்தருளிய அழகனாகிய இறைவற்கு இடம் இடும்பாவனம்.

பாடல் எண் : 185
-------------------------------------------------------------------
பொருளார்தரு மறையோர்புகழ் விருத்தர்பொலிமலிசீர்த்
தெருளார்தரு சிந்தையொடு சந்தம்மலர்பலதூய்
மருளார்தரு மாயன்னயன் காணார்மயலெய்த
இருளார்தரு கண்டர்க்கிடம் இடும்பாவன மிதுவே.

பொழிப்புரை :
---------------------------------------
தருக்கு மிகுந்த மாயனும் அயனும் காணாது மயங்கப் பொருள் நிறைந்த வேதங்களைக் கற்றுணர்ந்த அந்தணர்களால் புகழ்ந்து போற்றப் பெறும் பழமையானவரும், புகழ்மிக்க அம்மறையோர்களால் தெளிந்த சிந்தையோடு பல்வகை நிறங்களுடன் கூடிய மலர்களைத்தூவி வழிபடப் பெறுபவரும் ஆகிய அருள் நிறைந்த கண்டத்தை உடைய சிவபிரானுக்குரிய இடமாக விளங்கும் இடும்பாவனம், இதுவேயாகும்.

பாடல் எண் : 186
-------------------------------------------------------------------
தடுக்கையுட னிடுக்கித்தலை பறித்துச்சமண் நடப்பார்
உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பிட்டுழல் வாரும்
மடுக்கண்மலர் வயல்சேர்செந்நெல் மலிநீர்மலர்க் கரைமேல்
இடுக்கண்பல களைவானிடம் இடும்பாவன மிதுவே.

பொழிப்புரை :
---------------------------------------
பனை ஓலையால் செய்த தடுக்கைத் தம்கையில் இடுக்கிக்கொண்டு தலையிலுள்ள உரோமங்களைப் பறித்து முண்டிதமாக நடக்கும் சமணரும், உடுத்துவதற்குரிய காவியுடைகளை அணிந்து திரியும் புத்தரும் அறிய இயலாதவனாய், துன்பம் நீக்கி இன்பம் அருளும் இறைவனது இடம், தாமரை செங்கழுநீர் போன்ற மலர்களை உடைய மடுக்களும், செந்நெல் வயல்களும் சூழ்ந்த, நீர்மலர் மிக்க நீர்நிலைகளின் கரைமேல் விளங்கும் இடும்பாவனம் இதுவேயாகும்.

பாடல் எண் : 187
-------------------------------------------------------------------
கொடியார்நெடு மாடக்குன்ற ளூரிற்கரைக் கோல
இடியார்கட லடிவீழ்தரு மிடும்பாவனத் திறையை
அடியாயுமந் தணர்காழியுள் அணிஞானசம் பந்தன்
படியாற்சொன்ன பாடல்சொலப் 
பறையும் வினை தானே.

பொழிப்புரை :
---------------------------------------
கொடிகள் கட்டிய நீண்ட மாடங்களோடு கூடிய குன்றளூரில் கரைமீது இடியோசையோடு கூடிய அழகிய கடல் தன் அலைகளால் அடிவீழ்ந்து இறைஞ்சும் இடும்பாவனத்து இறைவனை, திருவடிகளையே சிந்தித்து ஆய்வு செய்யும் அந்தணர்கள் வாழும் காழிப்பதிக்கு அணியாய ஞானசம்பந்தன் முறையோடு அருளிய இப்பாடல்களை ஓத, வினைகள் நீங்கும். தானே - அசை.

#சர்வம்_சிவார்ப்பணம்

➡️➡️➡️➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்