சிவோஹம் சிவோஹம் நிர்வாண சதகம்

என்னை சிவமாக மாற்றிய நிர்வாண சதகம்
************************************************

(நீண்ட நாட்களுக்கு பிறகு காசி பல்கலைக்கழகத்தில் ஆதி சங்கரரின் நிர்வாண சதகத்தை முழுமையாக மூல நூலை எடுத்து படித்தேன். என்னை முழுமையாக புரட்டி போட்டது ஒவ்வொரு வரிகளும்.... அவசியம் ஒவொருவரும் படியுங்கள்.... உங்களுக்கே நீங்கள் யார் என்று முழுமையாக தெரியும்.......)

சிவோஹம் = சிவோ + அஹம்
= சிவம் என் அகத்துள் = அந்தர்யாமி!

* "சிவோஹம்" என்று சொல்வது...ஏதோ.. "நான் தான் சிவம்" என்பது பொருள் அல்ல! இதன் பொருள் ஞான நிலையான கடை நிலையை அடைந்த பின்னரே ஏற்படுவது. முதல் நிலையில் அல்ல.

சிவம் என் அகத்துள் வந்து பொங்குவதால்,
நான் சிவ மகிழ்ச்சியில், சிவ சொரூபத்தில்
மிளிர்கிறேன் - அதான் உண்மையான பொருள்!

முடியை வளர்த்து கொண்டு ,  யாரோ சாமியார் பின்னாடி திரிந்து கொண்டு ,  சில புத்தகங்களை படித்து கொண்டு , இரண்டே வாரம் தியான யோகம் பழகிட்டு, அஹம் பிரம்மாஸ்மி, நான் கடவுள், நானே
சிவம்-ன்னு சொல்லிக்கிடறவங்க சில பேரு!

"நான்" என்பது எங்கே அழிகிறதோ, அங்கே
தானே "சிவம்" வரும்?

நான் மறையைக் கற்றவனா ஞானி?
"நான்" மறையக் கற்றவனே ஞானி!

#சிவோஹம் =  #சிவோ +  #அஹம்

* இங்கே "அஹம்" என்பது = "ஆன்மாவைக்"
குறிப்பது!

* இங்கே "சிவம்" என்பது = "ஆன்மாவின் ஆன்மாவைக்" குறிப்பது! = அந்தராத்மா =
பரமாத்மா!

என் ஆத்மா, அந்தராத்மா என்னும் சிவத்தில்
நிறைந்து தளும்புகிறது! சிவோஹம்!

* தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்
= சிவோஹம்! சிவோஹம்!

* நெஞ்சு நிறையப் புகுந்தான்! = சிவோஹம்!
சிவோஹம்!

* அந்தர்யாமியாய் அகத்துளே நின்றான்! =
சிவோஹம்! சிவோஹம்!

அந்தர்யாமியாய் நெஞ்சு நிறைதல் = இது தான்
"சிவோ அஹம்" என்பதற்கு உண்மையான
பொருள்!

இது ஆதி சங்கரர், சின்ன பொடிப் பையனா
இருக்கும் போது எழுதியது!

தன் கேள்விகளுக்கான பதிலைத் தேடி,
குருவைத் தேடி அலைந்த போது எழுதியது!
மொத்தம் ஆறே பாட்டு தான்!

வீட்டை துறந்து தன் குருவை தேடி பயணித்த இளம் சங்கரன், இமாலயத்தின் அடியில் பத்ரிநாத்தை அடைந்த போது அவருக்கு 8 வயது. அங்கே அவர் கோவிந்தபாதரைச் சந்தித்து அவரது பாதாரவிந்தங்களில் வீழ்ந்து தன் பணிவைச் சமர்ப்பித்தார்.

அப்போது "நீ யாரப்பா?" என்று கோவிந்தபாதர் கேட்ட ஒரு கேள்விக்கு, சங்கரர் இந்த சீடனே ஒரு குருவோ என்று தோற்ற மயக்கத்தை உண்டாக்கிய வகையில் ஆறு ச்லோகங்களை கூறுகிறார். அவையே "நிர்வாண ஷட்கம்" என்று பெயர் பெற்றன.

* இந்தப் பாட்டு, மொத்தம் ஐந்து கேள்விகளுக்கான விடை!
1. ஜீவன் எது?
2. பரம் எது?
3. ஜீவன் எதை அடைய வேணும்?
4. அடையும் வழிகள் என்ன?
5. அடையும் வழியில் தடைகள் என்ன?

ஐந்தே ஐந்து கேள்விகள்! ஆறே ஆறு பாடல்கள்!
வாய் விட்டுப் படிங்க, சந்தம் தானா வந்துரும்!

ஆறு ஸ்லோகங்களும் ஒரு துள்ளும் இளம் கன்றின் வேகத்துடனும், முதிர் ஞானம் பெற்ற ஒரு துறவியின் ஆழத்தோடும், ஓடும் நதியாக பெருக்கெடுத்து செல்கிறது.   

நிர்வாண ஷட்கத்தை இதற்கு முந்தைய தலைமுறையினர் கோயில்களில் பாடக் கேட்டிருக்கலாம். வீடுகளில் பாடப்பட்டன. பிறகு இசைக் கருவிகள் பாடின. 

பற்றையும், பற்றின்மையையும் போதனையாய் ஒருங்கே நினைவுறுத்தும் இந்தப் பொக்கிஷத்தைநம் சித்தர்களின் குரல் அன்பர்கள் அனைவரும்  நம் வீடுகளில் ஒலிக்கச் செய்வோம். குழந்தைகளின் காதுகளில் இவை ஒலிக்கட்டும். இவற்றின் பரிச்சயம் அவர்களின் செவிகளுக்கு உண்டானால், அதன் பொருளை எதிர்காலத்தில் தெரிந்து கொள்வார்கள்.

முப்பத்திரண்டே வயதில் மூவுலகும் கடந்த ஞானம் பெற எப்படி ஆதி சங்கரரால் முடிந்தது. ஆன்மீக உபதேசம் மட்டும் அல்ல அவர் நூல்களில் சிறந்த கவித்வத்தையும் காண்கிறோம். அற்புதமான கவி
நயம் ததும்புகிறது
'நிர்வாண சதகம் ஆறே ஸ்லோகங்கள் கொண்டது. ஆனால்​ சதகம்​ என்றால்​ ​நூறு​ அல்லவோ என்று கேட்கலாம். ஆறிலேயே நூறையும் அடக்கிவிட்டால் மீதி 94க்கு என்ன அவசியம்?
தமிழ் சினிமாவில் ஒரு பாட்டு ''அம்மா கையில் கொடுத்து போடு செல்லக்கண்ணு. அவங்க ஆரை நூறு ஆக்குவாங்க செல்லக் கண்ணு'' அடுப்பங்கரை அம்மாவே ஆறை நூறாக்கும்போது ஆதி சங்கரரால் முடியாதா?
இதுவும் தவறு. சதகம் இல்லை. சத்கம் (ஷத்கம்) ஷட் என்றால் ஆறு. ஆறுமுகனுக்கு ஷண்முகம் என்று தானே பெயர். ஷண்மதம் என்றால் ஆறு மதப் பிரிவு. இப்போது புரிகிறதா . அந்த ஆறை இப்போது பார்ப்போம். ​

*ஸ்லோகம் 1.* 
*****************

மனோ புத்யஹங்கார சித்தா நினாஹம்,
ந ச ச்ரோத்ர ஜிஹ்வே, ந ச க்ராண நேத்ரே,
ந ச வ்யோம பூமிர், ந தேஜோ நவாயு:
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

என்னை யாரென்று எண்ணி​ எண்ணி​ நீ பார்க்கிறாய்?
நான் நீ நினைக்கிற தாவிக் குதிக்கும் மனம் இல்லை. எனக்கு தான் எல்லாம் தெரியும் என்று நினைக்கவைக்கும் புத்தியும் அல்ல. எண்ணங்களை தேக்கி வைக்கும் சித்தமும் அல்ல. கண்டதை கேட்கும் காது அல்ல, வாசனை தேடும் மூக்கு அல்ல, ருசியை தேடி எத்தனை கிலோ மீட்டர் வேண்டுமானாலும் அலையும் நாக்கும் கூட இல்லை. அசத்தியமான வஸ்துக்களை, அழியும் பொருள்களை, அழிவற்றதாக காணும் கண்ணும் இல்லை. மேலே காணும் வானமும் நான் அல்ல, நின்றுகொண்டு பேசுகிறேன் இந்த பூமியும் இல்லை. வெளிச்சம் தரும் அக்னியும் இல்லை, வீசும் தென்றலோ வாடைக் காற்றோ கூட இல்லை.
​​எதை கேட்டாலும் இல்லை இல்லை ​அது எதுவுமே நான் இல்லை என்கிறாயே, நீ யாரய்யா?
நானா? கேள்விப்பட்டிருக்கிறாயா சித்தமெல்லாம் சிவமான ஆனந்த ஸ்வரூபம் சிதானந்த ரூபம், சிவன் சிவன் சிவனே​ ​தான்​

*ஸ்லோகம் 2.* 
*****************

ந ச ப்ராண சங்க்யோ, ந வை பஞ்சவாயு: 
ந வாக் சப்த தாதுர், ந வா பஞ்சகோச: 
ந வாக் பாணி பாதம், ந சோப ஸ்தபாயு: 
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

''தம்பி நீ யார் ?
நானா. சொல்கிறேன் எண்ணிக்கொள்? நான் எதிலும் உள்ள பிராணன், உயிர் மூச்சு, காற்று இல்லையடா. பஞ்ச பிராணன் எனும் ஐந்து வாயுக்கள் இந்த தேகத்தை ஆட்டுவிக்கிறதே​ பிராண, அபான, வ்யான, உதான, சமான வாயு​ அதுவும்​ நான் ​ இல்ல. ஏழு விதமான தாதுக்களை சொல்வார்களே, அதில் ஒன்று கூட நான் இல்லை, ஏழுமே இல்லை. உரை உரையாக ஐந்து திரைகள் இருக்கிறதே , அன்னமய, பிராணமய, மனோமய , விஞ்ஞானமய, ஆனந்தமய கோ​சங்கள் ​ (உணவு, உயிர், மனம், அறிவு, ஆனந்தம்.​) என்று ​ கேள்விப்பட்டிருப்பீர்கள், ​அது எதுவுமே நான் இல்லை.
கேள்வி கேட்டாயே பதில் சொன்னேனே, அந்த பேச்சு நான் இல்லை. கையும் இல்லை காலும் இல்லை, காரியங்கள் செயகிறேனே அந்த ஐம்புலன்களும் இல்லை.
​​எதை கேட்டாலும் இல்லை இல்லை ​அது எதுவுமே நான் இல்லை என்கிறாயே, நீ யாரய்யா?
நானா? கேள்விப்பட்டிருக்கிறாயா சித்தமெல்லாம் சிவமான ஆனந்த ஸ்வரூபம் சிதானந்த ரூபம், சிவன் சிவன் சிவனே​ ​தான்​

*ஸ்லோகம் 3.*  
****************

ந மே த்வேஷ ராகௌ, ந மே லோப மோஹௌ, 
மதோ நைவ, மே நைவ மாத்ஸர்ய பாவ:  
ந தர்மோ ந சார்த்தோ, ந காமோ ந மோக்ஷ:  
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்

விசித்திரமாக இருக்கிறாயே. உன்னைப் பற்றி இன்னும் சொல்.
இதோ பார் எனக்கு யார்மேலும் எதன் மேலும் விறுப்போ, அருவருப்போ, பொறாமையோ, ஆசையோ, பேராசையோ, பிடிப்போ, காமமோ, மோகமோ கிடையாதே. நான் என்ன மரக்கட்டையா என்கிறாயா"? எனக்கு தான் நான் என்கிற கர்வமோ, அகம்பாவமோ கிடையாது. எனக்கு எதுவுமே வேண்டாமே. திருவள்ளுவர் சொன்னாரே முப்பால், ஆறாம் பொருள் இன்பம் இதெல்லாம் எனக்கு தேவை இல்லையப்பா.
​​​எதை கேட்டாலும் இல்லை இல்லை ​அது எதுவுமே நான் இல்லை என்கிறாயே, நீ யாரய்யா?
நானா? கேள்விப்பட்டிருக்கிறாயா சித்தமெல்லாம் சிவமான ஆனந்த ஸ்வரூபம் சிதானந்த ரூபம், சிவன் சிவன் சிவனே​ ​தான்​ நான்.

*ஸ்லோகம் 4.*  
****************

ந புண்யம் ந பாபம், ந சௌக்யம் ந துக்கம்!  
ந மந்த்ரோ ந தீர்த்தம், ந வேதா ந யக்ஞ:  
அஹம் போஜனம் நைவ, போஜ்யம் ந போக்தா,  
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

​நான் எல்லோரும் தேடும் புண்யமும் எனக்கு இல்லை. எல்லோரும் அஞ்சும் பாபமும் என்னிடம் இல்லை. சௌக்கியமாக வாழ்வது என்கிறார்களே அந்த சௌக்யமும் நான் இல்லை. அதனால் துக்கமும் இல்லை. எந்த மந்திரமும் எனக்கில்லை.எங்கெங்கோ ஆய்ந்து தீர்த்த யாத்திரை போய் ஸ்தலங்களை தரிசிக்கவோ, ஸ்நானம் பண்ணவோ அவசியம் இல்லை. எந்த யாக யஞங்களும் எனக்கு தேவை இல்லை. நான் சுகபோகங்களை ஆனந்தமாக துய்க்கும் போஜ்யமோ அதை துய்க்கும் போகியோ இல்லை.
​​​எதை கேட்டாலும் இல்லை இல்லை ​அது எதுவுமே நான் இல்லை என்கிறாயே, நீ யாரய்யா?
நானா? கேள்விப்பட்டிருக்கிறாயா சித்தமெல்லாம் சிவமான ஆனந்த ஸ்வரூபம் சிதானந்த ரூபம், சிவன் சிவன் சிவனே​ ​தான்​

*ஸ்லோகம் 5.*  
*****************

ந ம்ருத்யுர் ந சங்கா, ந மே ஜாதி பேத:  
பிதா நைவ, மே நைவ மாதா, ந ஜன்மா  
ந பந்துர் ந மித்ரம், குருர் நைவ சிஷ்யா:  
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

​எந்த நிலையிலும் ​எனக்கு மரணம் இல்லை​. நிறையபேர் ​கேட்டாலே நடுங்கும் மரண பயமும்​ எனக்கு ​ இல்லை​. நான் எந்த சாதி பிரிவும் அறியாதவன். யாதொரு பேதமும் எனக்கு கிடையாது. அன்னையுமில்லை தந்தையுமில்லை எனக்கு. எந்த ஜென்மமும் என்னையைப் பொறுத்தவரை இல்லை. சுற்றத்தார், உற்றவர்கள், பெற்றவர்கள் எவருக்குமே எனக்கேது? இன்னொரு விஷயம் தெரியுமா? எனக்கு யாரும் குருவோ என் சிஷ்யனோ கிடையவே கிடையாது.
​எதை கேட்டாலும் இல்லை இல்லை ​அது எதுவுமே நான் இல்லை என்கிறாயே, நீ யாரய்யா?
நானா? கேள்விப்பட்டிருக்கிறாயா சித்தமெல்லாம் சிவமான ஆனந்த ஸ்வரூபம் சிதானந்த ரூபம், சிவன் சிவன் சிவனே​ ​தான்​ நான்.​

*ஸ்லோகம் 6.*  
****************

அஹம் நிர்விகல்போ, நிராகார ரூபோ,  
விபுத் வாச்ஸ, சர்வத்ர, சர்வேந்த்ரி யானாம்  
நச சங்கடம் நைவ, முக்திர் ந மேயா  
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்

​​நான்​ ​சத்வ குண​ ரஜோ குண தமோகுண பேதம் எதுவுமே ​ இல்லாதவன்​. உயரம் குட்டை, குண்டு ஒல்லி, வெள்ளை கருப்பு எந்த உருவமும் எனக்கில்லையே. அழகு அழகற்றது என்ற பேச்சே எனக்கில்லையே. சர்வ வியாபியாக நான் எல்லாவற்றிலும் எல்லா புறங்களிலும், அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாக நீக்கமற நிறைந்தவன். எந்த ஸ்நேகிதமும், பந்தமும் எவரிடமும் இல்லாதவன். எனக்கு நரகமோ ஸ்வர்க்கமோ, எதுவுமே கிடையாதே.
​எதை கேட்டாலும் இல்லை இல்லை ​அது எதுவுமே நான் இல்லை என்கிறாயே, நீ யாரய்யா?
நானா? கேள்விப்பட்டிருக்கிறாயா சித்தமெல்லாம் சிவமான ஆனந்த ஸ்வரூபம் சிதானந்த ரூபம், சிவன் சிவன் சிவனே​ ​தான்​

மொத்தத்தில்......

மனம் புத்தி என்ற ஆணவ சித்தங்கள் எனக்கு இல்லை; இரு கண்ணில்லை; செவி, நாக்கு நாசியும் நான் இல்லை; வானில்லை மண்ணில்லை; வளி ஒளியும் நான் இல்லை; எப்போதும் நான் சிதானந்த ரூபத்தால் சிவமேயாகி நான்  இருக்கிறேன். (சிவோஹம்! சிவோஹம்!)

உயிர் மூச்சு நான் இல்லை; பஞ்ச ப்ராணனும் நான் இல்லை; எழு தாதும் இல்லை; பஞ்ச பூதமும் நான் இல்லை; கை கால்கள் இல்லை; சினை வினையும் நான் இல்லை; எப்போதும் நான் சிதானந்த ரூபத்தால் சிவமேயாகி நான்  இருக்கிறேன். (சிவோஹம்! சிவோஹம்!)

வெறுப்பில்லை எனக்கு விருப்பில்லை; மையல் பற்று எதுவும் இல்லை;  
சிறு கர்வம் இல்லை; அழுக்காறும் இல்லை;  
அறம் பொருள் நல்லின்ப, வீடு பேறு நான் இல்லை; எப்போதும் நான் சிதானந்த ரூபத்தால் சிவமேயாகி நான்  இருக்கிறேன். (சிவோஹம் சிவோஹம்!)  

வினை வேட்கை இன்பங்கள், துன்பங்கள் என இவை ஏதும் நான் இல்லை; வேதமோ அதில் கூறப்படுகின்ற தீர்த்தங்கள், வேள்விகள் இவை ஏதும் நான் இல்லை;  உணவில்லை நான்; உணவாக்கி உண்பவரும் நான் இல்லை! எப்போதும் நான் சிதானந்த ரூபத்தால் சிவமேயாகி நான்  இருக்கிறேன். (சிவோஹம்! சிவோஹம்!)

மரணங்கள் ஐயங்கள், உயர்வு தாழ்வு இவை நான் இல்லை; தந்தை தாயில்லை; நான் பிறக்கவில்லை; உற்றார்கள் சுற்றார்கள், குரு சீடர் நான் இல்லை; எப்போதும் நான் சிதானந்த ரூபத்தால் சிவமேயாகி நான்  இருக்கிறேன். (சிவோஹம்! சிவோஹம்!)

மாற்றங்கள் நான் இல்லை; காணும் பல தோற்றங்கள் நான் இல்லை; எங்கெங்கும் எல்லாமும், எதனுள்ளும் நானே இருக்கிறேன்; ஆனால் எனக்கு தளை (பாசம், பிடிப்பு) இல்லை; தடையில்லை; வீடுபேறில்லை;  
எப்போதும் நான் சிதானந்த ரூபத்தால் சிவமேயாகி நான்  இருக்கிறேன்.

நன்றி:- ஆன்மீகம் வாட்ஸ் அப் குழு

Comments

Post a Comment

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி