பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்

50 ஆனந்த மாலை


நரியைக் குதிரைப் பரியாக்கி

    ஞால மெல்லாம் நிகழ்வித்துப்
பெரிய தென்னன் மதுரையெல்லாம்
    பிச்ச தேற்றும் பெருந்துறையாய்
அரிய பொருளே அவினாசி
    அப்பா பாண்டி வெள்ளமே
தெரிய அரிய பரஞ்சோதீ
    செய்வ தொன்றும் அறியேனே

நரியைப் பரியாக்கி உலகம் எல்லாம் பரவச் செய்து, மதுரைப் பகுதி முழுதும் பித்தேற்றிய பெருந்துறைப் பெருமானே! அரும் பொருளே! அவினாசி அப்பனே! பாண்டி நாட்டின் கடலே! தெரிதற்கரிய மேலான ஒளியே! நான் உய்யும் பொருட்டு விடுப்ப தாகிய காரியத்தைச் சிறிதும் அறிந்திலேன்.

திருவாசகம்-ஆனந்த மாலை


பண் :

பாடல் எண் : 1

மின்னே ரனைய பூங்கழல்க
ளடைந்தார் கடந்தார் வியனுலகம்
பொன்னே ரனைய மலர்கொண்டு
போற்றா நின்றார் அமரரெல்லாம்
கன்னே ரனைய மனக்கடையாய்க்
கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த
என்னே ரனையேன் இனியுன்னைக்
கூடும் வண்ணம் இயம்பாயே. 

பொழிப்புரை :

இறைவனே! உன் திருவடியை அடைந்த அன்பர்கள் இவ்வுலக மாயையைக் கடந்தார்கள். தேவர்கள் எல்லாம் மலர்களால் அருச்சித்து வணங்கி நின்றார்கள். அப்படி இருக்கும் போது, கல்லை நிகர்த்த மனத்தை உடையவனாய்க் கழிக்கப்பட்டுத் துன்பக் கடலில் வீழ்ந்த யான், இனி உன்னை அடையும் வகையைச் சொல்வாயாக.

குறிப்புரை :

மின் ஏர் அனைய - மின்னலினது அழகையொத்த. உலகம், மண்ணுலகம். பொன் ஏர் அனைய மலர் - பொன்னினது அழகையொத்த பூக்கள்; இவை கற்பகத் தருக்களில் உள்ளவை. அமரர் போற்றியது, அடியார்கள் அடைந்த பெரும்பேற்றினை. `கடை யேனாய்` என உயர்திணையாக ஓதற்பாலதனை, ``கடையாய்`` என அஃறிணையாக ஓதினார், இழிவு பற்றி. கழிப்புண்டு - உன்னால் நீக்கப் பட்டு. ``என்நேர் அனையேன்`` என்றது. `இழிவினால் எனக்கு ஒப்பார் பிறரின்றி, என்னையே ஒத்த யான்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 2

என்னால் அறியாப் பதம்தந்தாய்
யான தறியா தேகெட்டேன்
உன்னால் ஒன்றுங் குறைவில்லை
உடையாய் அடிமைக் காரென்பேன்
பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும்
பழைய அடிய ரொடுங்கூடா
தென்னா யகமே பிற்பட்டிங்
கிருந்தேன் நோய்க்கு விருந்தாயே. 

பொழிப்புரை :

இறைவனே! என்னால் அறிய முடியாத பதவியைக் கொடுத்தாய்; நான் அதனை அறியாமல் கெட்டேன்; உன்னால் ஒரு குறைவும் இல்லை; அடியேனுக்குப் பற்று யாருளர்? எப்பொழுதும் உன்னைப் பணிந்து வழிபடுகின்ற உன் பழவடி யாரோடு கூடாமல் பின்னிட்டு நோய்களுக்கு விருந்தாக இங்கு இருந்தேன்

குறிப்புரை :

அறியா - அறிதற்கியலாத. பதம் - நிலை. `அஃது அறியாதே கெட்டேன்` என்றது, `மழக் கை இலங்கு பொற்கிண்ணத் தின் அருமையை அம்மழவு அறியாததுபோல (தி.8 திருச்சதகம்-92) அறியாது கெட்டேன்` என்றபடி. ``உன்னால் ஒன்றும் குறைவில்லை`` என்ற தனை, `தந்தாய்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. `உனக்கு அடிமை செய்தற்கு நான் யார் (என்ன உரிமை யுடையேன்)` என்க. இவ்வாறன்றி, `உன் அடிமையாகிய எனக்குத் துணை யார்` என்பது பொருளாயின், இதனை இறுதிக்கண் கூட்டுக. மேலைப் பொருளே பொருளாயவழி, `என்செய்கேன்` எனக் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 3

சீல மின்றி நோன்பின்றிச்
செறிவே யின்றி அறிவின்றித்
தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச்
சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலுங் காட்டி வழிகாட்டி
வாரா உலக நெறியேறக்
கோலங் காட்டி ஆண்டானைக்
கொடியேன் என்றோ கூடுவதே. 

பொழிப்புரை :

ஒழுக்கம் முதலானவை இல்லாமல் தோற்பாவை யின் கூத்தை நிகழ்த்திச் சுழன்று கிடக்கின்ற என்னைத் தன்னிடத்து அன்பு முதலியவற்றைக் கொடுத்து ஆண்டருளின இறைவனைக் கொடியேன் சேர்வது எந்நாளோ?

குறிப்புரை :

செறிவு - உறவு; அன்பு. சீலம் முதலிய நான்கும் சரியை முதலிய நான்குமாக உரைப்பாரும் உளர். மால் - அன்பு. வழி - ஞானம், ``மாலுங் காட்டி, வழி காட்டி`` என்றதனை, ``கோலங் காட்டி`` என்றதன் பின்னர்க் கூட்டுக. ``ஏற ஆண்டான்`` என இயையும். கோலம் - திருமேனி. ஏனையவற்றொடு நோக்க, `ஆண்டாயை` என்பதே பாடம் என்றல் கூடும்.

பண் :

பாடல் எண் : 4

கெடுவேன் கெடுமா கெடுகின்றேன்
கேடி லாதாய் பழிகொண்டாய்
படுவேன் படுவ தெல்லாம்நான்
பட்டாற் பின்னைப் பயனென்னே
கொடுமா நரகத் தழுந்தாமே
காத்தாட் கொள்ளுங் குருமணியே
நடுவாய் நில்லா தொழிந்தக்கால்
நன்றோ எங்கள் நாயகமே. 

பொழிப்புரை :

கெடுவேன், கெடுமாறு கெடுகின்றேன். கெடுதி இல்லாத நீ அதனால் பழியை அடைந்தாய்; படுதற்குரிய துன்பங்களை எல்லாம் நான் பட்டால் காட்டும் உனக்குப் பயன் என்னை? கொடிய நரகத்தில் ஆளாகாது காத்தருளும் குருவே! நீ நடுவு நிலைமையில் நில்லாது ஒழிந்தால் அது உனக்கு அழகாகுமோ!

குறிப்புரை :

`கெடும் இயல்புடையேனாகிய யான், அங்ஙனம் கெடுமாற்றானே கெடுகின்றேன்; அஃது என் குற்றமாயின், இக் குற்றமுடையேனை ஆட்கொண்டாய் என்ற பழியைக் கேடு சிறிதும் இல்லாத நீ பெற்றாயாவாய்; நான் படவேண்டுவனவாய துன்பங்கள் அனைத்தையும் பட்டுக்கிடப்பேனாயின், அதனால் உனக்கு உளதாம் பயன் யாது?` என்க. நடுவாய் நிற்றல் - ஆட்கொண்ட அடிமையை எவ்வாற்றாலேனும் அணைத்துக்கொள்ளல் வேண்டும் என்னும் முறைமைக்கண் வழுவாது நிற்றல்.

பண் :

பாடல் எண் : 5

தாயாய் முலையைத் தருவானே
தாரா தொழிந்தாற் சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ
நம்பி யினித்தான் நல்குதியே
தாயே யென்றுன் தாளடைந்தேன்
தயாநீ என்பால் இல்லையே
நாயேன் அடிமை உடனாக
ஆண்டாய் நான்தான் வேண்டாவோ.

பொழிப்புரை :

தாயாகி முலை உண்பிப்போனே! முலை தாரா விடின் நாயேன் சவலையாய் ஒழிவேனோ? இனியாயினும் அருள் செய்வாய்; தாயே என்று உன் திருவடியை அடைந்தேன். நீ என் னிடத்து அருள் நிறைந்தவனாகி இருக்க வில்லையோ? நாயினேனது அடிமைத் திறம் வேண்டி என்னை ஆண்டருளினை; அடிமைத் திறமே யன்றி அடியேன் வேண்டாவோ?

குறிப்புரை :

தாயாய் - உயிர்கட்கெல்லாந் தாயாய்நின்று. முலையைத் தருவானே - அவள் பாலூட்டுதல்போல நலம் செய் பவனே. சவலையாய் - சவலைப் பிள்ளை - தாய் இருந்தும் அவள் பாலை உண்ணப் பெறாத பிள்ளை. தயா - தயவுடையவன்; ஆகு பெயர். இதன்பின், `தயாவாய்` என ஆக்கம் வருவிக்க. `இல்லையே` என்னும் ஏகாரம், தேற்றம். `நாயேனாகிய அடிமை உன் உடனாம்படி முன்பு ஆண்டாய்; இப்பொழுது நான் வேண்டாவோ` என்க.

பண் :

பாடல் எண் : 6

கோவே யருள வேண்டாவோ
கொடியேன் கெடவே அமையுமே
ஆவா என்னா விடில்என்னை
அஞ்சேல் என்பார் ஆரோதான்
சாவா ரெல்லாம் என்னளவோ
தக்க வாறன் றென்னாரோ
தேவே தில்லை நடமாடீ
திகைத்தேன் இனித்தான் தேற்றாயே.

பொழிப்புரை :

இறைவனே! நீ அருள வேண்டாவோ? கொடியேன் கெடவே அமையுமோ? அந்தோ! என்று நீ இரங்காவிடின் என்னை அஞ்சேல் என்பார் யாருளர்? பிறவிப்பயன் அடையாமல் இறப்பவர் எல்லாம் என்னளவு தானோ? என்னைக் கைவிடுதல் உனக்குத் தகுதி அன்று என்று ஒருவரும் சொல்லாரோ? நான் திகைத்தேன்; இனியா யினும் தெளிவிப்பாயாக.

குறிப்புரை :

கோவே - தலைவனே. கெடவே - கெடுதல்தான். அமையுமே - தகுமோ. சாவார் - உலகில் வாளா இறப்பவர். என் அளவோ - எனது நிலைமையினரோ; `உன்னால் ஆட்கொள்ளப்பட்ட வர்களோ` என்றபடி. `அல்லாராதலின்` அவர்களைப்போலவே நானும் இறத்தல் பொருந்துவதோ` என்பது குறிப்பு. `அவ்வாறு இறந்தால், உனது அருட்செயலுக்குப் பொருந்தும் முறைமை அன்று என்று உயர்ந்தோர் கூறமாட்டாரோ` என்க.

பண் :

பாடல் எண் : 7

நரியைக் குதிரைப் பரியாக்கி
ஞால மெல்லாம் நிகழ்வித்துப்
பெரிய தென்னன் மதுரையெல்லாம்
பிச்ச தேற்றும் பெருந்துறையாய்
அரிய பொருளே அவினாசி
அப்பா பாண்டி வெள்ளமே
தெரிய அரிய பரஞ்சோதீ
செய்வ தொன்றும் அறியேனே.

பொழிப்புரை :

நரியைப் பரியாக்கி உலகம் எல்லாம் பரவச் செய்து, மதுரைப் பகுதி முழுதும் பித்தேற்றிய பெருந்துறைப் பெருமானே! அரும் பொருளே! அவினாசி அப்பனே! பாண்டி நாட்டின் கடலே! தெரிதற்கரிய மேலான ஒளியே! நான் உய்யும் பொருட்டு விடுப்ப தாகிய காரியத்தைச் சிறிதும் அறிந்திலேன்.

குறிப்புரை :

பரி - ஊர்தி. அவினாசி. கொங்குநாட்டுத் தலம். இனி, `அழிவில்லாதவன் என்றுமாம். பாண்டி - பாண்டிநாடு. வெள்ளம் - கருணை வெள்ளம்.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி