Aditya Guruji on Rahu Kethu Peyarchi 2019

MESHAM : 2019 - RAHU KETHU PEYARCHI மேஷம்: 2019 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மேஷம்: 

(அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரம் 1ம் பாதம் வரையிலும் சு, சொ, சோ, சை, ல, லீ, லு, லோ, அ, ஆ ஆகிய எழுத்துகளை பெயரில் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்) 

மேஷ ராசிக்கு சாதகமற்ற இடமாக சொல்லப்படும் நான்காமிடத்தில் இருந்து மிகுந்த நன்மைகளை தரக்கூடிய மூன்றாமிடத்திற்கு ராகு மாறுகிறார். அவரது எதிர்முனை கிரகமான கேது தற்போதிருக்கும் தொழில், வேலையைப் பாதிக்கக் கூடிய பத்தாமிடத்திலிருந்து ஒன்பதாமிடத்திற்கு செல்வார். 

ராகு,கேதுக்கள் 3, 6, 11-மிடங்களில் இருக்கும்போது மிகப் பெரிய நன்மையைச் செய்வார்கள் என்று நம்முடைய ஜோதிட மூலநூல்கள் ஒருமுகமாக வலியுறுத்திச் சொல்கின்றன. அதிலும் சகாயஸ்தானம் எனப்படும் இந்த மூன்றாம் இடத்திற்கு ராகு வருவது ஒருவரின் ராசிக்கு 18 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே ஆகும். ஆகவே இம்முறை ராகு,கேது பெயர்ச்சியால் மிகுந்த நன்மைகளை அனுபவிக்க கூடிய முதல் தர ராசியாக மேஷம் இருக்கும். 

கடந்த ஆண்டுக்கு முன்பு வரை மேஷத்திற்கு அஷ்டமச்சனி நடந்த காரணத்தினால் மிகப் பெரிய நன்மைகள் எதுவும் நடைபெறவில்லை. 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அஷ்டமச்சனி முடிந்த பிறகு ஒரு மனிதனுக்கு நல்ல விதமாக வாழ்க்கை செட்டில் ஆக வேண்டும் என்பது விதி. 

தற்போதைய கோட்சார கிரக நிலைகள் அனைத்தும் மேஷ ராசிக்கு சாதகமாக அமைந்து வருவதால் இந்த ராகு-கேது பெயர்ச்சி மூலம் மேஷ ராசியினருக்கு அவர்களது வயது, இருப்பிடம், தகுதிக்கு ஏற்றார்போல நன்மைகள் மட்டுமே அதிகமாக நடைபெறும். 

18 வருடங்கள் கொண்ட ஒரு முழுச்சுற்றில் ராகு, கேதுக்கள் ஒரு ராசியில் சுமார் ஒன்றரை ஆண்டு காலம் நிலை கொண்டிருப்பார்கள். இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் ஒரு ராசிக்கு மாறிய உடனே அவர்கள் பலன் தந்து விடுவது இல்லை. 

மெதுவான இயக்கத்தை கொண்ட கிரகங்களான ராகு, கேதுக்கள் ராசியின் நடுப்பகுதியில் இருக்கும் காலம் முதல்தான் தங்களுடைய உண்மையான பலனைத் தருவார்கள். அந்த நிலையின்படி 2019ம் ஆண்டு மார்ச் மாதம் ராகு-கேது பெயர்ச்சி நடந்து ஆறுமாதத்திற்குப் பிறகு நீங்கள் ராகு-கேதுக்கள் தரும் நன்மைகளை உணர முடியும். 

அந்த நேரத்தில் தற்போது உங்களுக்கு சாதகமற்ற நிலையில் இருக்கும் குரு எட்டாமிடத்தில் இருந்து மாறி, ஒன்பதாமிடத்திற்கு செல்ல இருப்பதால் வரும் நவம்பர் மாதம் முதல் ராகு உங்களுடைய தர்ம,கர்மாதிபதிகளான குரு மற்றும் சனியின் பார்வையில் இருப்பார். 

பார்க்கும் கிரகத்தின் பலனை அப்படியே தரக்கூடிய ராகுவால் வருகின்ற நவம்பர் மாதத்திற்கு பிறகு மேஷ ராசிக்கு நன்மைகளும் மேன்மைகளும் நடைபெற இருக்கின்றன. 9. 10-க்குடைய தர்ம,கர்மாதிபதிகளின் பார்வை சுமார் ஒரு வருட காலம் வரை அதாவது அடுத்த ராகு-கேது பெயர்ச்சி வரை ராகுவுக்கு இருப்பதால் கிட்டத்தட்ட அவர் உங்களுடைய தர்ம,கர்மாதிபதியாகவே மாறி சிறந்த நல்ல பலன்களை தர இருக்கிறார். 

இந்தப் பெயர்ச்சியின் மூலம் அடுத்த 2020ம் ஆண்டு நீங்கள் தொழில், மற்றும் வேலையில் நிலை கொண்டு, நிறைந்த லாபத்தையும் நல்ல பலனையும் பெறுவதற்கான அஸ்திவார அமைப்புகளை இந்த ஆண்டு ராகு செய்து தருவார். எனவே இந்த ராகு, கேதுப்பெயர்ச்சியின் மூலம் முதல்தரமான நன்மைகளை மேஷ ராசிக்காரர்கள் அனுபவிப்பீர்கள் என்பது உறுதி. 

ராகு மூன்றாமிடத்தில் நிலைகொள்வதால் உங்களுடைய சொல்லாற்றல், செயல்திறன், வாக்குப்பலிதம், மனதைரியம், எதையும் சமாளிக்கும் திறன், தெளிவான சிந்தனை போன்ற அனைத்துப் பண்புகளும் இப்போது உறுதி பெற்று மிகச்சிறந்த நல்லமுடிவுகளை இந்தக் காலகட்டத்தில் நீங்கள் எடுத்து உங்களுடைய எதிர்காலத்தை வளமாக்கி கொள்வீர்கள். 

மேலும் இதுவரை வாழ்க்கையில் செட்டிலாகாத இளையபருவ மேஷராசிக் காரர்களுக்கு இந்தக் காலகட்டம் மிகவும் முக்கியமான நன்மைகளையும், எதிர்காலத்திற்கான அஸ்திவாரங்களையும் உருவாக்கும் என்பதால் இளைய பருவத்தினருக்கு வாழ்க்கையில் நிலை கொள்வதற்கான நல்ல சந்தர்ப்பங்கள் இந்த ராகுப்பெயர்ச்சியின் மூலம் உருவாகும். அவற்றை சிறியவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். 

ஏற்கனவே எந்த ஒரு விஷயத்திலும் காலூன்றி நிற்கமுடியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தற்போது நல்ல வாய்ப்புகள் கிடைத்து அவர்களும் தங்கள் துறைகளில் நிலைபெற முடியும். குறிப்பிட்ட சில மேஷ ராசிக்காரர்களின் செயல்திறன் நல்லவிதமாக வெளிப்பட்டு சாதனைகளும் செய்வார்கள். 

எனவே பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சாதகமான வாய்ப்பு மேஷராசிக்கு தற்போது வந்திருப்பதால் இந்த வாய்ப்பினை நன்கு உபயோகப்படுத்திக் கொண்டு உங்கள் எதிர்காலத்தை வளம்பெறச் செய்து கொள்வீர்கள் என்பது உறுதி. 

ராகு நல்லநிலையில் இருக்கும் போது கேது அதற்கு எதிரான சாதகமற்ற நிலையில் இருப்பார் என்றாலும், தற்போது பத்தாமிடத்தில் இருந்து ஒன்பதிற்கு மாறும் கேதுவால் உங்களுக்கு எவ்வித தொல்லைகளும் இருக்காது என்பதையும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். 

ஏனென்றால் தற்போதைய மாற்றத்தால் கேது, சுபரான குருவின் வீட்டிற்கு மாறுகிறார். அதைவிட மிகப்பெரிய நிலையாக பெயர்ச்சியின் ஆறு மாதங்கள் கழித்து, கேது குருவுடனேயே இணைகிறார். எனவே ஒன்பதாமிடத்துக் கேது உங்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்வார். 

பொதுவாக ஒன்பதாமிடத்துக் கேது பாபத்துவம் அடைந்தால், தந்தையார் வழியில் கெடுபலன்களையும், தந்தைவழி உறவினர்கள் மூலம் வீண் விவகாரங்களையும், பூர்வீகச் சொத்துக்களை அனுபவிக்க முடியாத நிலைமையையும் அதிர்ஷ்டம் குறைகின்ற நிலைமைகளையும் தருவார். ஆனால் இம்முறை தனுசில் குரு, மற்றும் சனியுடன் இணையும் கேது எவ்வித கெடுபலன்களையும் தராமல் ஆன்மீக விஷயங்களில் உங்களுக்கு நன்மைகளைச் செய்வார். 

கேதுவின் பலனாக மேஷ ராசிக்காரர்கள் சிலருக்கு கோவில் கட்டும் அமைப்பும், இன்னும் சிலருக்கு ஏற்கனவே சிதிலம் அடைந்திருக்கும் பழமையான திருக்கோவில்களை சீரமைத்து புனருத்தானம் செய்யும் வாய்ப்பும், இன்னும் சிலருக்கு ஆன்மீகத்தில் அதிகமான ஈடுபாடும் இருக்கும். சிலருக்கு ஆலயம் சம்பந்தப்பட்ட பதவிகளையும் அறங்காவலர் போன்ற பணிகளையும் கேது தருவார். 

தள்ளிப்போய் இருந்த வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களும் பயணங்களும் தற்போது கை கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் விஷயத்தில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். 

மேஷத்தினரின் அந்தஸ்து, கௌரவம், மேம்படுவதோடு வருமானம், பணப்புழக்கம் ஆகியவைகள் சரளமாக இருக்கும். நான்குபேர் இருக்கும் இடத்தில் பளிச்சென தனித்து தெரிவீர்கள். எதையும் தன்னம்பிக்கையுடன் அணுகுவீர்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். 

இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினருக்கு திருமணம் கூடி வரும். குழந்தை பிறக்காமல் தாமதமாகி வரும் தம்பதியினருக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும். 

வழக்கு கோர்ட் காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அவை அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும். 

மூத்த சகோதரர்களிடம் நல்ல உறவும் நன்மைகளும் இருக்கும். சகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும். இதுவரை கருத்து வேற்றுமைகளாலும் குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள்.. 

விவசாயிகள் கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும் நிலை வந்திருக்கிறது. இதுவரை சொன்னதை செய்து முடிக்க முடியாமல் இருந்த நிலை மாறி அனைத்தும் நல்லபடியாக நடக்கும் நேரம் இது. 

பரிகாரங்கள்: 

ஏழைகளுக்கும், முடியாமல் இருப்பவர்களுக்கும் சிறு உதவியாக இருந்தாலும் தேடிப்போய் உதவி செய்து, அவர்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெறுங்கள். வயதானவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப் பட்டால் உதவுவது, ஏழை மாணவருக்கு கல்வி உதவி, வசதிக்குறைவான குடும்பப் பெண்ணிற்கு திருமணத்திற்கு உதவுவது போன்றவைகளால் ராகுவால் கிடைக்கும் நன்மைகளை இன்னும் பெருக்கிக் கொள்ள முடியும்.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி