வன்னியர்கள் குல தெய்வம் ஊர் என்று சொல்லலாம்

ஆழ்வார் குறிச்சியிலும் வன்னியப்பர்  காேவில் உண்டு.

வன்னியர்கள்கேரளாவிலும் உண்டு.

திருச்சிற்றம்பலம்

நற்றுணையாவது நமச்சிவாயவே

#ஐந்தாம்திருமுறை -#திருவன்னியூர்-#திருக்குறுந்தொகை -#திருநாவுக்கரசர்
#26

#காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க் கணம் பாட, மாநடம் ஆடும் பரமனார்; வாட, மான் நிறம் கொள்வர்-மணம் கமழ் மாட மா மதில் சூழ் வன்னியூரரே.
(1326)
- - - - -
பொருள் உரை:
"மணம் கமழ்கின்ற மாடங்களும், மாமதில்களும் சூழ்கின்ற வன்னியூரில் வீற்றிருக்கும் இறைவர். சுடுகாட்டினை அரங்காகக்கொண்டு, நள்ளிரவில் பூதகணங்கள் பாடப் பெருநடம் ஆடும் பரமர்; மான்போன்ற இப்பெண் வாட, இவளது பொன்னிறத்தைத் தாம் கொண்டு பசலை நிறம் தந்த இயல்புடையவர்."
- - - - -

#செங்கண் நாகம் அரையது; தீத்திரள் அங்கை ஏந்தி நின்றார்; எரி ஆடுவர்; கங்கை வார்சடைமேல் இடம் கொண்டவர்; மங்கை பாகம் வைத்தார்-வன்னியூரரே.
(1327)
- - - - -
பொருள் உரை:
"உமையம்மையாரை ஒரு பாகமாக வைத்த வன்னியூரில் வீற்றிருக்கும் இறைவர், அரையின்கண் சிவந்த கண்ணையுடைய நாகத்தைக் கட்டியவர்; தீத்தொகுதியை அழகிய கரத்தில் ஏந்தி ஆடுபவர்; நீண்ட சடைமேலிடத்தில் கங்கையைக் கொண்டவர்."
- - - - -

#ஞானம் காட்டுவர்; நன்நெறி காட்டுவர்; தானம் காட்டுவர், தம் அடைந்தார்க்கு எலாம்; தானம் காட்டி, தம் தாள் அடைந்தார்கட்கு வானம் காட்டுவர்போல்-வன்னியூரரே.
(1328)
- - - - -
பொருள் உரை:
"வன்னியூர்த்தலத்து இறைவர், தம்மையடைந்த அன்பர்கட்கெல்லாம், ஞானமும், அதனை அடைதற்குரிய நல்ல நெறியும், அடைதற்குரிய இடமும் காட்டுவர்; தன் திருவடியில் அடைந்தவர்கட்குத் தானங்காட்டுவதோடமையாது வானங்காட்டி ஆளவும் வைப்பார்."
- - - - -

#இம்மை, அம்மை, என இரண்டும்(ம்) இவை மெய்ம்மை தான் அறியாது விளம்புவர்; மெய்ம்மையால் நினைவார்கள் தம் வல்வினை- வம்மின்!-தீர்ப்பர் கண்டீர், வன்னியூரரே.
(1329)
- - - - -
பொருள் உரை:
"உலகினுள்ளீரே! வன்னியூர்த்தலத்து இறைவர் தம்மை மெய்ம்மையாக நினைவார்களுடைய வலிய வினையைத் தீர்க்கும் இயல்பினர்; இப்பிறப்பு, அப்பிறப்பு என்ற இரண்டின் உண்மைத் தன்மை அறியாது விளம்பும் சிலரைச் சாராது வந்து வழிபடுவீராக."
- - - - -

#பிறை கொள் வாள்நுதல் பெய்வளைத் தோளியர் நிறையைக் கொள்பவர்; நீறு அணி மேனியர்; கறை கொள் கண்டத்தர்; வெண் மழுவாளினர்; மறை கொள் வாய்மொழியார்-வன்னியூரரே.
(1330)
- - - - -
பொருள் உரை:
"வேதங்களை வாய்மொழியாக உடைய வன்னியூர்த்தலத்து இறைவர், பிறையின் பேரழகு கொண்ட ஒளி நுதலையும் வளைபெய் கரங்களையும் உடைய பெண்களது கற்பினைக் கவர்பவர்; திருநீறணிந்த திருமேனியர்; திருநீல கண்டத்தர், ஒளிவீசும் வெள்ளிய மழுவினை உடையவர் ஆவர்."
- - - - -

#திளைக்கும் வண்டொடு தேன் படு கொன்றையர்; துளைக்கை வேழத்தர்; தோலர்; சுடர் மதி முளைக்கும் மூரல் கதிர் கண்டு, நாகம், நா வளைக்கும் வார்சடையார்-வன்னியூரரே.
(1331)
- - - - -
பொருள் உரை:
"வன்னியூர்த்தலத்து இறைவர் வண்டும், தேனும் திளைத்துப் பொருந்தும் கொன்றையர்; துளையுடைய அயிராவணம் என்ற வேழத்தினை உடையவர்; புலித்தோலினர்; ஒளி வீசும் மதியில் தோன்றும் நிலாக்கதிரைக்கண்டு நாகமானது கொள்ளுவதற்கு நாவினை வளைக்கின்ற நீண்ட சடையினர் ஆவர்."
- - - - -

#குணம் கொள், தோள்,-எட்டு,-மூர்த்தி இணை அடி இணங்குவார் கட்கு இனியனும் ஆய் நின்றான்; வணங்கி மா மலர் கொண்டவர், வைகலும் வணங்குவார் மனத்தார்-வன்னியூரரே.
(1332)
- - - - -
பொருள் உரை:
"வன்னியூர்த்தலத்து இறைவர் எட்டுத் தோள்களையும் எட்டுக்குணங்களையும் உடைய மூர்த்தி; தன் இணையடிகளை இணங்கி வழிபடுவார்கட்கு இனியராகியவர்; மலர்கள் கொண்டு வணங்குவார் மனத்தின் கண்ணவர்."
- - - - -

#இயலும் மாலொடு நான்முகன் செய் தவம் முயலின் காண்பு அரிது ஆய் நின்ற மூர்த்திதான்- அயல் எலாம் அன்னம் ஏயும் அம் தாமரை வயல் எலாம் கயல் பாய் வன்னியூரரே.
(1333)
- - - - -
பொருள் உரை:
"அயற்பக்கமெலாம் அன்னங்கள் மேய்கின்ற, அழகிய தாமரைகளை உடைய வயல்களிலெல்லாம் கயல்மீன்கள் பாய்கின்ற, வன்னியூர்த்தலத்து இறைவர், இயலுகின்ற திருமாலோடு நான்முகன் தவம் செய்து முயன்றும் காண்டல் அரியராய் நின்ற மூர்த்தியாவர்."
- - - - -

#நலம் கொள் பாகனை நன்று முனிந்திடா, விலங்கல் கோத்து, எடுத்தான் அது மிக்கிட, இலங்கை மன்னன் இருபது தோளினை மலங்க ஊன்றி வைத்தார்-வன்னியூரரே.
(1334)
- - - - -
பொருள் உரை:
"வன்னியூர்த்தலத்து இறைவர், நன்மை கொண்ட பாகராகிய தம்மை முனிந்திடாது திருக்கயிலையைக் கரங்களைக் கொண்டு கோர்த்தெடுத்தபோது அவ்விலங்கை மன்னனின் இருபது தோள்களை மலங்கும் படியாகத் திருவிரலை ஊன்றியவர் ஆவர்."
- - - - -
#திருநாவுக்கரசர்

அரன் நாமம் சூழ்க நமச்சிவாய போற்றி

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி